Sunday, February 23, 2014

சித்தர் குரு பதஞ்சலியின் ஞான சபை - இனி நமது வலைத்தளத்திலும்


சத்குரு துணை 

 
அன்புள்ளம் கொண்ட வலைப்பதிவுலக ஆன்மீக நெஞ்சங்களுக்கு அடியேனின் அநேக நமஸ்காரங்கள். இந்த வலைப்பதிவு வலையுலகம்  பற்றி எனக்கு சற்றே அறிமுகம் இல்லாத  நிலையில் ஆனது  2008 ஆம் ஆண்டு கால வாக்கில் துவக்கப் பட்டு இன்று வரை ஆன்மீக பதிவுகளின் உறைகலனாக திகழ முயற்சிக்கிறது.



ஆன்மீக உலகில் தங்கள் பயணத்தை துவக்கும் அன்பர்கள் அனைவருக்கும் சித்தர்களைப் பற்றிய ஆர்வமே அவர்களின் தேடல்களுடைய எல்லைகளை விரிவுபடுத்துகிறது. 


ஏன் சித்தர்கள் மீதான அபிமானம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால் 


ஒட்டுமொத்த உலகிற்கும் அவர்களுடைய சிறந்த பங்களிப்பு


அவர்கள் பெற்றிருக்கக் கூடிய அந்த மரணமில்லாப் பெருவாழ்வு.  


தங்களை நாடி நிற்கும் பக்தர்களுக்கு அருள்வதில் காட்டும் வேகம் .

இதற்கும் மேலாக அமானுஷ்யம் நிறைந்த அவர்களின் வாழ்க்கை.


இன்னும் அவர்கள் வாழ்கிறார்கள் , வழிநடத்துகிறார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இப்படி பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.



சித்தர்கள்  பல்லாண்டு காலம் எது இறைவன் என்பதை தேடி அலைந்தார்கள் . பல்லாண்டு கால தவத்திற்கு பின்னரே அவர்கள் இறைவனை உணர்ந்தார்கள்,அடைந்தார்கள், அறிந்தார்கள், புரிந்து கொண்டார்கள் . அத்தோடு அவர்கள் நின்று விடவில்லை. 

பதினெட்டு சித்தர்கள் முதல் இன்னும் பலகோடி சித்தர்கள் வரை தாங்கள் அடைந்த இறைவனை அனைவரும் அடைய வேண்டும் , அனைவரும் இறைவனாக வேண்டும் என்று தான் தாங்கள் பெற்ற இறைவன் என்ற பேரின்பத்தை மானுடம் முழுமைக்கும் பெற வேண்டி அந்த வழியை சாஸ்திரங்களாகவும், சூத்திரங்களாகவும் , பாடல்களாகவும், செய்யுள்களாகவும் வகுத்து வைத்தனர்.



அப்படிப்பட்ட ரிஷிகளில் முன்னவரும் , மூத்தவருமான சத்குரு பதஞ்சலி மகரிஷி அவர்கள் இறைவனை அடையும் அந்த வழியை யோக சூத்திரங்களாக மனித குலத்திற்கு அளித்தார்.  ஆண் பெண் என்ற பேதமற்று விண்ணவர் முதல் மன்னவர் வரை அனைவருக்கும் இறையை அடையும் பொது வழியாக அவர் அந்த யோக சூத்திரங்களை வடிவமைத்து தந்தார்.





மனம் என்பது எல்லா உயிர்க்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் மனிதனை தவிர மற்ற உயிர்களுக்கு அவை கட்டுப்பட்ட அளவிலேயே செயல்படுகிறது. அவை உண்பது , உறங்குவது, உறவு கொள்வது எல்லாம் அவைகளுக்கு ஒரு மட்டுப் படுத்தப்பட்ட நிலையிலே உள்ளது .

மனதின் முழுப்பரிமாணத்தையும் கைக் கொள்ளும் பிறவியாக மனித பிறவி உள்ளது. 

மனதை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அந்த மனிதன் இறை நிலைக்கு உயர முடியும். மன ஆராய்ச்சி , மனதின் அலைகளை ஒருமுகப் படுத்துதல் இவ்வாறு மனதை பல  பரிமாணங்களுக்கு உட்படுத்தி முடிவில் தான் ஜடப் பொருள் அல்ல . தான் நித்திய இருப்பான ஆன்மா என்பதை சாதகன் உணர்கிறான்.


பொதுவாக மனிதர்களை இருவகைப் படுத்தலாம். 

நம்பிக்கை உள்ளவர்கள்
நம்பிக்கை அற்றவர்கள் 

இந்த இருவகையினர் பெரும்பாலும் எல்லாத் துறைகளிலும் பரவி இருப்பார்கள். ஏனென்றால் பல்வேறு பிறவிகளின் வழியாக மாறக்கூடிய அறிவின் வழியாக இந்த குணத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.


இருவருமே தாங்கள் கைக்கொண்டுள்ள கோட்பாடே சிறந்தது என தீவிர பிடிவாதம் கொண்டிருப்பார்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் கருத்து சரியானது என்பதை வலுவான வாதமாக வைப்பார்கள். 


உண்மையில் சத்குரு பதஞ்சலி மகரிஷி அவர்கள் இயற்றிய யோக சூத்திரங்கள் நம்மிடம் இருக்கும் மனம் என்ற வஸ்துவைக் கொண்டே நம்மை ஆராய வழிகோலுகிறது.

 நம்பிக்கை, நம்பிக்கையின்மை என்ற இரு கோட்பாடுகளுக்கு அப்பால் செல்லக் கூடியதாக யோக மார்க்கம் அமைந்துள்ளது. சில வடிவமைக்கப்பட்ட வழிகள் அந்த நித்தியப் பொருளிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அந்த வழிகளே பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்.

குழந்தை வளர்ந்து வாலிபனாக ஆவதைப் போல, அந்த வாலிபன் பின் வயோதிகர் ஆவதைப் போல, நம் குணம், மனம், அறிவு, புத்தி ஆகியவை  புற மற்றும் அகக் காரணிகளால் மாற்றமடைகிறது. இந்த கோட்பாடை மறுப்பவர்கள் கூட நாளை தங்களுடைய அனுபவத்தின் மூலம் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. 

நம்புங்கள் , அதை நம்பாதீர்கள் என்று மறுத்து சொல்வதில்லை ஆன்மீகம். 

ஆய்வு செய்யுங்கள். உங்களை நீங்களே கண்டு கொள்ள முன்வாருங்கள்.

இறைவனும், அதைக் காட்டும் குருவும் ஆய்வுக்குட்பட்டவரே தான் என்கின்றன சாஸ்திரங்கள். 

நித்திய இருப்பான ஆன்மாவை அடையும் வழியை, உண்மை எனும் உன்னதத்தை உணரும் வழியை அடைய துணை நிற்கும் யோக சூத்திரங்களே அருமை வலைப்பதிவு நண்பர் இடித்துரைத்ததை போல  பதஞ்சலி எனும் பாம்பின் அற்புதம்.


மனிதருக்கு ஆன்ம ஞானத்தை உணர்த்தும் பொருட்டு , அதை உபதேசிக்க இறைவனே ரிஷிகள் என்னும் வழியில் மனிதராக அவதரித்து வருகிறான். முழு சுதந்திரம் உடையதாக இருக்கும் ஆன்மாவை கொண்டிருந்தும் மாயை என்ற ஒன்றினால் தன்னை கட்டுண்டதாக நினைக்கும் மனிதனின் இயல்பை உணரவைக்க உபதேசிக்கப் பட்ட பல சாஸ்திரங்களில் முதலாவதாக நிற்பது பதஞ்சலி யோக சூத்திரம்.


முதலில் ஹிரண்யகர்ப்பரால் இந்த ஞானம் உபதேசிக்கப்பட்டு பிறகு மகரிஷி ஸ்ரீ பதஞ்சலியினால் தொகுக்கப் பட்டது என்கின்றனர் சான்றோர்கள். 

தொகுக்கப்பட்ட யோக அங்கங்களை ஒன்றாக இணைத்து அதற்கு ஒரு வடிவம் தந்ததால் அந்த அஷ்டாங்க யோகத்திற்கு பதஞ்சலி மஹரிஷி தந்தை என்று அழைக்கப் படுகிறார்.


எக்காலத்திற்கும் ஆன்ம சாதகர்களுக்கு கலங்கரை விளக்கமாய் திகழும் பதஞ்சலி யோகம், மன விகாரங்களை அதிகம் கொண்ட தற்கால மனிதர்களுக்கு மனதை செம்மைப்படுத்தவும், அதன் மூலமாக இறைவனை அறிந்து கொள்ளவும் பதஞ்சலி யோக சூத்திரங்களின் தேவை இந்த கலிகாலத்தில் தான் அதிகமாக இருக்கிறது.


அந்த வகையிலே பல ஆண்டுகாலமாக சாதி பேதமற்று, உண்மை உணரத் தலைப்படும் யாவர்க்கும் ஒளிவிளக்காய் திகழ்ந்து கொண்டிருக்கும் பதஞ்சலியின் ஞான சபையின் வகுப்புகள் குருவருள் பெற்று இனி வலைத்தளத்திலும் வலம் வரும். நலம் சேர்க்கும்.


முன்பொரு சமயம் ஜீவ நாடியில் சத்குரு பதஞ்சலி மகரிஷி அவர்கள் நமது சத்சங்கத்தை ஞான சபை என்று பெருமிதத்தோடு கூறினார்கள். பல்லாண்டு காலமாக சத்சங்கத்தில் நிகழ்த்தப் பட்டு பதிவு செய்யப்பட்ட சில ஆண்டு கால சித்த யோக சாதனை வகுப்புகள் இனி எழுத்துக்களாக      “சித்தர் குரு  பதஞ்சலியின் ஞான சபை “என்று பிரிவில் அவை தொகுக்கப் படும்





                                                                               தொடரும் 

                                                                      சிவ.உதயகுமார்



 



                                                                                            

 
 





 
 


No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment