Monday, August 22, 2022

யோக தர்ஸன் (என்ற ) "யோக தரிசனம்” துவக்கம் .................

யோகம் : 

            ஒன்றுபடுவது. இணைவது, ஒன்றோடு ஒன்றை இரண்டறக் கலப்பது, ஒன்றாவது. இறைவனிடமிருந்து நமக்கு அளிக்கப்பட்ட ஆன்மா என்ற இறை சக்தியை இறைவனோடு இணைத்து விடுவதேயாகும். அதற்கு உதவும் அரும் சாதனம் யோகமே.

 


தர்ஸனம்:  

                          ஒன்றை வைத்து ஒன்றை, அவ்வொன்றின் உதவி கொண்டு அறியக்கூடியதே 'தர்ஸனம்' என்பார்கள். மேலும் கர்மா, கன்மா, ஆன்மா போன்றவற்றை விளக்கும் ஞான சாதனங்களின் சாஸ்திரங்களை தர்ஸனம்" என்பார்கள். 

 

முதன்மையான ஆறு சாஸ்திரங்கள்:

 

1.சாங்கியம் (கபில முனிவர்)

2. யோகம் ( பதஞ்சலி மகரிஷி)

3. நியாயம் (கௌதம முனிவர்)

4. வைசேஷிகம் (கணாதர்)

5. பூர்வ மீமாம்சை (ஜைமினி முனிவர்)

6.உத்தர மீமாம்ஸை (வியாசர்)

 

        தர்ஸனங்களுள் இரண்டாவது முக்கிய நூலாக சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் "யோகம்" என்று குறிப்பிடப்படுகிறது.

 

               "யோக தர்ஸன்" என்று அழைக்கப்பெறும் யோகசூத்திரத்தை முதலில் பிரம்மனுக்கு      ஸ்ரீ நந்திதேவர் உபதேசித்ததாகவும், அதனைச் சுருக்கமாகவும். தெளிவாகவும், சூத்திர வடிவாய் உலகிற்கு பரமேஸ்வரனின் உத்தரவால் அளித்தவர் யோகத்தந்தையான ஆதிசேஷனின் அம்சமானவரும், ஸ்ரீமத் ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்குத் தம்பி லட்சுமணனாகவும், ஸ்ரீமத் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அண்ணன்                       ஸ்ரீ பலராமராகவும் அவதரித்தவரே ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி ஆவார்.

 

                                         ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியவர்கள் அறிவு, மனம், புத்தி, சித்தம் இவற்றில் குற்றங்களைக் களைய மேற்கூறிய யோக சூத்திரத்தையும் மற்றும் அநே நூல்களையும் நமக்கு அளித்துள்ளது பற்றி அவரே தனது ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

 

...........................ஈசன் தன்

 

"கட்டளையால் சில பணிகள் யாம் ஏற்று

ஏற்றுத்தான் அணிமாதி யோகம் மெத்த

ஒப்பற்ற யோகசூத்திரம் நட்டுவாங்கம் மெத்தவே

வானநூல் தாவரங்கள். மேலான வாகடத்தின் சீர் செம்மை.

 

செம்மை யொத்து தமிழாய்வு யோக முத்திரை

 சீர்தூக்க ஆருடம் சரகதி 

மெத்தவே இன்ன பிற நூல்யாவும் 

மேலாக இயற்றியதோர் காலமுண்டு."

 

யோக தரிசனம்:

    'யோகம்' = ஒன்றினோடு மற்றொன்று ஒன்றாய் ஒன்றி, ஒன்றும் மற்றொன்றும் ஒன்றிக் கலப்பது, ஒன்றாகி விடுவது.

 

          'ஆன்மா' = நம்மில் இறை அம்சமாய்,  

        இறையின் ஒரு கூறாய், ஆன்ம சக்தியாய், சத்வ குண வடிவாய், நம்மில் சகலமுமாய், நம்மை, நம்மில் பொதிந்து நம் அறிவாய், புத்தியாய், அதன் சித்த வடிவாய், நம் உடலையும், உயிரையும், இயக்குகின்றவனுமான இறைவனின் இயங்கு தளமான ஆன்மாவை அறிந்து கொண்டால் அன்றி ஆண்டவனை உணர முடியாது. 

               வாய்க்கும் எப்பிறவியிலும் நம்மைத் தொடரும் நிலையில், ஞான சாதனங்களின் துணை கொண்டு, மீண்டும் நம்மிடம் இருந்து அதனை பக்குவமாக, இறையோடு ஒன்றிணைக்கும் (பெரும் கடும் முயற்சி, பயிற்சி) என்ற யோக சாதனை ஒன்றே உண்மையான உறுதியான வழியாகும்.

 

 'தியானம்' = (தவம்)

        உலகு என்பது நம் மனதிலே, மனத்தின் நினைவிலே தோன்றுகிறது. உருவங்களும் பெயர்களும் நினைவு இல்லாமல் வராது. நினையாவிடில் மனதில எதுவும் நிற்காது. பதியாது. நாம் காண்பவை, கேட்பவை. உணர்பவை அனுபவிப்பவை, விரும்புபவை யாவுமே நமக்கு நினைவை உண்டாக்குகிறது.

 

        இதற்கான புலன்களின் வாயில்களை மூடிவிட்டால், நுழைவு அனுமதியை முற்றிலும் மறுத்துவிட்டால், நினைவுகளின் வசிப்பிடமான மனமுமில்லை. நினைவுகளும் இல்லை. மனத்தின் பலவீனங்களைக் களைந்து, மனம் அமைதியுற தியானம் (தவம்-ஜபம்) செய்ய வேண்டும். தவம் இயற்றல் வேண்டும்.

 

         நமக்குள் நாமே எழுப்பும் சக்திமிக்க ஓம்கார ஒலி, நம் மனத்தின் உள்ளே ஒளியாக மாறி நம் உடலின் உள்ளும் புறமும் பரவி மன உணர்வுகளின் வளர்சிதை மாற்றத்தால், உடலின் வளர்சிதை மாற்றத்தை நிறுத்தி வைத்து, தெய்வீக சக்திப் பரவலை உடல், உள்ளம் இரண்டினையும் அதில் அழுந்தச் செய்து, மனத்தின் பேராற்றலை, மனமற்ற, உணர்வற்றலாய், மடைமாற்றி, இயற்கையை வசப்படுத்தி விடும்.

       இந்நிலை தொடர்ந்து இடைவெளி சிறிதும் இன்றி நிகழ்வதே தாரணை, தியானம், சமாதி என்று உரைக்கப்படும் முக்கூட்டு சக்தி திரட்சி ஆகும். 

       யோகத்தின் மூலம் கைவரப் பெறும் சித்தியாகும். இதனையே 'சம்யமம்' என்ற தவ ஆற்றல் மற்றொன்றின் மீது பாய்ச்சும் யோகியின் சிறப்பாகும்.

 

பதிப்பாசிரியராகிய என்னுரை :

     யோக சாஸ்திரத்தை மக்களுக்கு அவர்களுக்கு விளங்கும்படியாக உபதேசிக்க சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் ஆணையை ஏற்று அதனை தனது வாழ்க்கையின் லட்சியமாக வாழ்ந்தவரும், தனது மாணவர்கள் , மெய்யன்பர்கள், நலம் விரும்பிகளுக்கு வானில் குரு மண்டலத்தில் பிரகாசிக்கக் கூடிய ரேவதி நட்சத்திரக் கூட்டத்தில் தானும் விண்மீனாக இருப்பதற்கு பணிக்கப் பட்டுள்ளார் என்ற நம்பிக்கையை விதைத்து சிரஞ்சீவியாக இருக்கும் யோக ஆச்சாரியார் குருஜி டி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் ஆசியோடு பதஞ்சலி யோக சூத்திரங்களை மக்களுக்கு விளக்க முயற்சிப்போம் )

 

தொடரும்.........




 

 

No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment