Saturday, February 27, 2016

மனம் - உடல் - உயிர்ப்பு ??????????????????????

         மனித வாழ்க்கை என்பது மனிதனாகப் பிறந்த பிறகு அவனுக்கு ஏற்படுகின்றது. அதற்கு முன்பாக அது எவ்வாறு தோன்ற முடியும்? மனிதனாகப் பிறந்த பிறகு தானே ஒரு ஞான வாழ்க்கை என்பது ஏற்படும். அவன் பிறப்பதற்கு முன்னால் வேறு ஒரு வாழ்க்கையிலே அவன் இருந்திருக் கிறான். அந்த வாழ்க்கையிலே அவன் தனக்காக என்னென்ன செய்திருக்கிறான் என்பது அந்த சூட்சம வடிவிலே இருக்கின்ற அவர்களுக்கு மட்டுமே தெரியும். 



ஆகவே அந்த இரு வாழ்க்கை. இக வாழ்க்கை,   பர வாழ்க்கை என்பது போல. அந்த வாழ்க்கையினை    பர வாழ்க்கை என்று சொல்ல முடியாது. ஒரு பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுக்கும் முன்பாக காத்திருக்கும் வாழ்க்கை. இக வாழ்க்கையில் நாம் செவ்வனே செயல் களைச் செய்திருந்தால் வருகின்ற பிறப்பும் மற்றும் அதற்கு பிறகு வர இருக்கின்ற பிறப்பும்,ஒருவேளை பிறப்பற்ற நிலையும் நமக்கு ஏற்படும். மனித வாழ்க்கை மற்றும் மனிதப் பிறப்பு மற்ற எல்லாப் பிறப்புகளில் இருந்தும் வித்தியாசமானதாக இருக்கின்றது. 



அத்தனை அறிவு பூர்வமான விஷயங்களைக் கொண்டுள்ள இந்த உடம்பினைக் கொண்டு இந்த உலக வாழ்க்கை நடைபெறு கின்றது. இந்த உடம்பிலே இருக்கக்கூடிய எத்தனையோ விதமான உடற்கருவிகள். மூலப்பொருட்கள் மற்றும் அந்த மூலப்பொருட்களால் ஆன அந்த கருவிகளின் செயல் பாடுகள். அவற்றையெல்லாம் விட அந்த செயல் பாடுகளுக்கு நடுவே அந்த உயிர் வாழ்ந்து கொண்டிருக் கின்ற போது அந்த உயிருக்கு, புருடனுக்கு எண்ணங்கள் வருகின்றன. இவற்றையெல்லாம் ஏதோ நாம் புலன்கள் வழியாக வருகின்றது என்று நினைத்துக் கொண்டிருக் கிறோம். நம்முடைய புலன்கள் நம் வாழ்க்கையினை சாட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறது அவ்வளவே.



ஐந்து பருப்பொருட்களும் இணைந்து உடம்பு உருவாகின்ற போது அதில் மனம், எண்ணம், சித்தம், போன்றவை அதில் உருவாகும். ஆக உருவற்ற ஒன்று. பொருளற்ற ஒன்று, நிலையற்ற ஒன்று. பரிமாணமற்ற ஒன்று எவ்வாறு பருப்பொருட்களால் உருவாகும்? என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு பொருளை நீங்கள் வெளியே எடுத்து வைக்கிறீர்கள். அந்த பொருளிலே நீங்கள் தண்ணீரை ஊற்றுகிறீர்கள். அந்த தண்ணீர் காணாமல் போகின்றது. காரணம் அப்பொருள் சூடாயிருக்கிறது. அதனைச்சூடு அல்லது உஷ்ணம் தாக்கியிருக்கிறது. 

சில பொருட்களில் நீங்கள் தண்ணீரை ஊற்றுகிறீர்கள். அதில் இருந்து புகை வருகின்றது. அப்பொருள் தீப்பற்றியிருக்கிறது. நெருப்பில் ஒரு பொருளை இடுகிறீர்கள் அது எரிகிறது. அப்பொருள் காய்ந்திருக்கிறது. 

        ஆக அந்த பொருட்களுக்கு எத்தனையோ தன்மைகள் இயல்புடையதாய் இருக்கின்றது. பருப்பொருட்களின் பரமாணுக்களும் இணைந்து மனம் என்ற ஒன்று உருவாகின்றது. அந்த மனம் ஒன்று உருவாகினால் தான் நீங்கள் அதில் பல விஷயங்களை இட்டு நிரப்புகிறீர்கள். அந்த வி;ஷயங்களிற்கு ஏற்றாற்போலத்தான் ஆசை, கோபம், மோகம் என்ற எத்தனையோ குணவியல்புகள் வருகின்றன. அவையெல்லாம் உங்களைத் தங்கள் இஷ்டம் போல ஆட்டுவிக்கின்றன. அதனால் நீங்கள் பாவ, புண்ணியங் களுக்கு ஆளாகிறீர்கள். ஆகவே ஒவ்வொரு அணுவும் மற்றும் செயலும் நம்மை உருவாக்குகிறது. இது விந்தையாக உள்ளதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதில் விந்தை என்பதே இல்லை.


மல்லிகையின் மணம் அது செடியாக இருக்கும்போது வருவதில்லை. மொட்டு மலர்கின்றபோது எங்கிருந்தோ மணம் அதனுள் வந்து சேர்ந்து விடுகிறது. அந்த மணம் எவ்வாறு அந்த மலருக்கு வந்ததோ அதுபோல அந்த மனிதனுக்கு குணம் என்ற பண்பு வந்தமைகிறது. ஆக அந்த மனமும், மனத்தில் உள்ள குணமும் அது இவனுடைய செயல்பாடுகளைத் தீர்மானிப்பதற்குக் கருவியாக அமைகின்றது. அதற்குப் பின்னால்தான் தன்னுடைய செயல்பாடுகளை அவன் புலன்கள் மூலமாக தூதனுப்பிப் புலன்களை தன்னுடைய பணியாட்களாக வைத்துக் கொண்டு பிறகு அந்தப் புலன்களாலயே இவன் அடிமைப்படுத்தப்பட்டு புலன் வேட்கைக்கு இவன் நிரந்தர அடிமையாகி பின்பு அதைப் பல்வேறு பிறவிகளுக்கு அதைத் தொடர்கின்ற நிலைக்கு ஆளாகின்றான். எவ்வாறு மனம் உருவாகிறது என்பது மட்டுமல்ல.


 ஒரு உயிர் எவ்வாறு உருவாகின்றது. அவை உருவாவதற்கு எவை யெல்லாம் காரணமாக அமைகின்றது. ஒரு பிறவிக்கு முன்னால் நேருகின்ற மரணம் அதற்குக் காரணமாகிறது. (சிரிப்பு) அது எவற்றையெல்லாம் தீர்மானிக்கிறது. இது போன்ற புதினங்கள் எழுகின்றது. இந்த புதினங்கள் விடை காண முடியாதவையாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் படைக்கப்படக் காரணமான நம்முடைய பருப் பொருட்களுக்குள்ளே அடங்கியிருக்கிறது.
இப்போது தாதுக்கள் ஏழு என்பதை பற்றிப் பார்ப்போம். தாதுக்கள் என்று சொன்னால் இங்கே உங்களுடைய உடல் உருவாவதற்காக ஏற்பட்டுள்ள அடிப்படைப் பொருட்களாகும். அவையும் பஞ்ச பருப் பொருட்களில் இருந்துதான் வந்தன.  அந்தப் பொருட்கள் எவ்வாறு உண்டாகின்றன என்பது பிறப்பில் இருந்து வரக்கூடியவை. 

அவை முறையே
1) இரசம்
2) இரத்தம்
3) மாமிசம்
4) மேதஸ்
5) அஸ்தி
6) மஜ்ஜை
7) சுக்கிலம் அல்லது சுரோணிதம்


  ஆக  ஆண் , பெண் கரு கலக்கின்ற போதுதான் மனிதனை உருவாக்குகின்ற அடிப்படைப் பொருட்களான இந்த தாதுக்களை ஏற்படுத்துகின்றது. முற்சொன்ன ஏழினைத்தமிழிலே சொன்னால் இரசம், இரத்தம், செவி, ஊன், கொழுப்பு. (என்பு-எலும்பு),  மூளை, வெண்ணீர். இதில் வெண்ணீர் என்பது சுக்கிலம் அல்லது சுரோணிதம். இது குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு ஆண் அல்லது பெண்ணிற்கு அவர்களுடைய பருவ காலத்திலே உடம்பிலே விளைவது. ஆக மேலும், கீழும் விளைகின்ற இந்தப் பொருட்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வருகின்றது. 

ஆகவே பஞ்ச கோசங்கள் என்ன என்பதை இப்போது நாம் பார்க்கப்போகின்றோம்.



No comments:

Post a Comment

TRANSLATE

Click to go to top
Click to comment