Friday, February 1, 2013

மாமதுரை காண்போம்- பாண்டிய நாட்டின் எல்லைகள் எதுவரை ???????


மதுரை வரலாறு  தொடர்ச்சி...............



தென்தமிழ்நாடு

 இத்தென்னாட்டின் பழமைச் சிறப்பு, பாரதத்திற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாகும். தமிழ்நாடு என்னும் திருநாட்டின் புகழ் அளவிடற்கரியதாகும். உலகமொழியில் ஒப்பற்ற மொழியெனத் தமிழ் மொழி கொண்டு தவமும் சீலமும் தாங்கிய ஞானியர்கள் வாழ்ந்த நாடாகும். 

பண்பும் படைவலியும்
பயிலும் கலைச்சிறப்பும்
அன்பும் அறமும் வளர்
அருதமிழ்மாநாடு

தண்புனல் ஓடைகளும்
தழைத்திடும் பூம்பொழிலும்
விண்படு மால்வரையிலும்
விளங்கும் எழில் காணும்”,

 

நிலமும் ,நிலவும் தோன்றுதற்கு முன்னரே தோன்றிய தொல்தமிழ் என்றும் எம்மொழியிலும் எம் தமிழே சிறந்தது என, பன்மொழி பயின்றோரும் கூறுவதற்கு இணங்க, இச்செம்மொழிக்குச் சங்கம் வளர்ந்து அதனில் அங்கம் வகித்த இறையனாரும் முருகவேளும் இதன் புகழ் உயர்த்தினர் எனின், என்னே இதன் உயர்வு! 




வீரம், விவேகம், பொறை, புலமை, கலைகள், இறையாண்மை கொண்ட திருத்தமிழ்நாடு வாழ்க வாழ்கவே.

முந்தைய தமிழ்ச்சமுதாய மக்களின் பழந்தென்மதுரை இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே தோரயமாக 30,000 ஆண்டுகளுக்கு முந்திப் பரவியிருந்ததென்பது மொழியறிஞர் பாவாணரின் கூற்றாகும்.


ஸ்வார்த்தம் சத்சங்கம், பழங்காநத்தம் , madurai history
                                                                

இறையனார் களவியலுரை தரும் ஆதாரப்படி, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் பாண்டியர் ஆட்சி, குமரியைத் தலைநகராகக் கொண்டு அதற்குத் தெற்கே உள்ள நீண்ட நிலப்பரப்பை ஆண்டதாகக் கூறப்படுகிறது. 


இன்றைய குமரிமுனை தொட்டு ஈழம் உட்பட, அதன்தொடர் தெற்காக, ஆஸ்த்ரேலியாக்கண்டம் வரை தொடர்நிலப்பரப்பு இருந்ததென ஆய்வுகள் கூறுகின்றன. 

இப்பரப்பிற்குட்பட்ட தென்எல்லை ஒலிநாடு என்றும், இதன் கிழக்கு எல்லையை ஒட்டி ஆஸ்த்ரேலியாவாகவும், மேற்குக்கீழ்ஒரம் மடகாஸ்கர் எனவும், மேற்கின் மேல்புறம் பொதிகை மலைத்தொடர் என்றும், வரைபடத்தில் காணப்படுகின்றது. (வரைபடம் பக்கம்……) ஒலிநாட்டின் நடு நேர்கோட்டின் கீழிலிருந்து மேலாக, கன்னி ஆறு, பக்ருளி ஆறு என இரு ஆறுகள் தோன்றி வங்கக் கடலில் கலந்திருக்கின்றன. 


இவ்விரு நதிகளுக்குமிடையே மேருமலை அணியாகவும், அதற்கடுத்து மூதூர் என்ற நாடும், அதற்கும் மேல்புறம் பெரு ஆறும், அடுத்து குமரி ஆறும், உயிரோட்டமுள்ள நதிகளாத் தவழ்ந்து நாட்டை வளமாக்கிக் கடலில் கலந்துள்ளன. இக்குமரிஆற்றின் தோற்றுவாய் முதல் கடற்சங்கமாகும் பகுதிவரை படர்ந்திருந்ததே அன்றைய தென்தமிழ் நாடாகும். இதுவே ஆதிமதுரையுமாகும். 



ஆதிமதுரை


தமிழ்ச் சங்கத்தின் தலைமகன் 


   இங்குதான்  அகத்தியரைத் தலைமையாகக்கொண்ட முதற்தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது

 பிற்காலத்தில் கடல்கோளால் இந்நாடு அழிந்துபட்டிருக்கிறது. இதன்பின் வெண்டேசர் செழியன் என்ற பாண்டிய மன்னர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார். 

இவர் காலத்தில் இடைச்சங்கம் என்றழைக்கப்படும் இரண்டாம் தமிழச்சங்கம் உருவாகியிருக்கிறது. 

இச்சங்கத்திற்கு தொல்காப்பியர் தலைமையேற்றுயிருந்தார். இந்நகரமும் இரண்டாம்முறையாய்க் கடல் கொண்டது. 

அன்றைய காலத்தில் இமயமலையின் ஒருபகுதி கடலால் சூழப்பட்டிருந்ததேன்பது வரலாறு. 

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அதை மெய்பிக்கும்வகையில், இமயத்தின் பலஇடங்களில் கடல்வாழ்உயிரினங்களின் எலும்புகூடுகள், படிமங்கள் பலவற்றைக்கண்டு ஆய்ந்து கூறியுள்ளனர். 


ஏறத்தாழ 4500 ஆண்டுகள், 89 பாண்டிய அரசர்கள் தொல்தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார்கள். தொல்காப்பியமும் புறநானூறும் 6500 வருடங்கள் முந்தைய வரலாறுகளைக் கூறுவதோடு மகாபாரத அர்ஜூனன் மதுரைக்கு வந்து பாண்டிய இளவரசி அல்லிராணியை மணந்தாகவும்  கூறுகிறது.

மேலும் மதுரை பாண்டியப் பேரரசின் பழைமை பற்றியும் மதுரை கோவில் பற்றியும் கூறும் ஆதாரங்களில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கீரேக்கம், சீனம், எகிப்து நாடுகளின் பண்டைய இலக்கியங்களிலும், சிங்கள வரலாற்று நூல்களான இராஜாளி மகாவம்சம் போன்ற நூல்களிலும் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பௌத்த, சமண,  சாணக்கியர் சந்திரகுப்தர் மன்னர்களின் சாஸனங்களும், கூறுவதோடு, வேள்விக்குடி சின்னமனூர் திருவாலங்காடு முதலிய ஊர்களில் கிடைக்கப்பெற்ற செப்புப்பட்டையங்களிலும், கற்காலகருவிகள் ஆதிதச்சநல்லூர்          மதுரைக் கோவலன் பொட்டலிலிருந்தும், கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழி, அரிக்கமேடு ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்திய அநேக குறிப்புகளிலும் ஆனைமலை ஐயர்மலை கல்வெட்டுகளிலும்                         ஸ்ரீ மீனாட்சிஅம்மன் திருக்கோவிலைச்சுற்றியுள்ள 44 கல்வெட்டுகளிலும் ஆலயத்தின் பழமை மற்றும் பாண்டியப் பேரரசின் தொன்மையையும் விளக்குவதாக உள்ளது. 



கி.பி. 7ம் நூற்றாண்டில் மதுரைக்கு திருஞானசம்பந்த மூர்த்திசுவாமிகள் வந்ததும், கூண்பாண்டியன் வெப்புநோயைத் தீர்த்த வரலாறும், கி.பி.800ல், வெளிநாட்டைச் சேர்ந்த புகழ்மிக்க யாத்திரிகர்கள், பெரிபுளுஸ், தாலமி மற்றும் கி.பி.13-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்த மார்க்கபோலோவும் இதனை குறிப்பிட்டுள்ளார்கள். 

பாண்டியர் என்ற சொல் பண்டை என்ற பழமைக்கு ஒற்றைச்சொல் விளக்கமாகும். 

சோழநாடு சோறுடைத்துஎனப்போல் பாண்டிய நாடு பழைமையுடைத்து என ஒரு அணியை அணிவிக்கலாமே! 

வரலாற்று அடிச்சுவடுகளில் ஆயிரமாயிரம் உண்டு. அஃதில் இங்கு நாம் கண்டுகொண்ட இம்மதுரை அமுதில், கலந்த பாண்டிய, சோழ, பல்லவ, விஜயநகர சாளுவ, நாயக்கர் அரசுகளும் மற்றும் இதர பல ஆட்சியாளர்களின் செய்திகளோடு மதுரை திருவாலவாயன் திருக்கோவில் வரலாறுகளாய் விரிந்துநிற்கிறது இத்தொடர். 



இதற்கு பல்நிலைகளில் துணைபுரிந்த முன்நூல் ஆசிரியர்கட்கும், இம்முயற்சிக்கு தூண்டுதலும், துவளவிடாது துணைநின்ற என்   துணைவிக்கும், எனது ஆன்மீக அன்புநெஞ்சங்களுக்கும்,        ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் ஆதிசைவபட்டர் சிவத்திரு. சண்முக பட்டர், சந்திரசேகர அசோக் பட்டருக்கும்,பெரும் உதவிகள் புரிந்து பெயர் கூறவேண்டாம் எனச் சொன்னவர்கட்கும், அன்னை  ஸ்ரீ மீனாட்சி திருவருள் யாவற்று பிறப்பிலும், கூடி நிற்பதாகுக. உடலுக்கு உயிர் போல, இன்நூலுக்குயிராய் நின்ற முன்னாசிரியர் பெருமக்கள் பலருக்கு அவர்கள் பெயர் சொல்லி வணங்கும் பிரிதொரு வாழ்த்துப்பக்கத்தில் விரித்துரைக்கவிருக்கிறேன். 



தொடரும்
அடியவர்க்கடியவன்     டி.எஸ். கிருஷ்ணன்   

1 comment:

TRANSLATE

Click to go to top
Click to comment